இலங்கையில் வீசும் அரசியல் சூறாவளி!
உங்களில் பலருக்குத் தெரிந்தும், சிலருக்குத் தெரிந்திருக்காது என்ற காரணத்தினால் இப்பதிவை இடுகின்றேன்! எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. (இலங்கையில் ஜனாதிபதி ஆட்சியே நடைபெற்றுவருவது குறிப்பிடத் தக்கது) ஏற்கனவே உலகில் பலரதும் எதிர்ப்புக்களை சம்பாரித்து, தனது சர்வாதிகார ஆட்சியால் மக்களின் நலன் மறந்து குடும்ப அரசியல் செய்துவரும் ராஜபக்சே இத் தேர்தலை உரிய தேர்தல் வருடத்திற்கு முன்னரே நடாத்தத் தீர்மானித்து திகதியையும் அறிவித்திருக்கும் இவ்வேளை, கடந்த முறையை விட நாட்டில் மகிந்தவுக்கு கடும் எதிர்ப்பு அலைகள் மேலோங்கி வருவதை அவர் அறியாமலில்லை..
வழமைக்கு மாறாக, இம்முறை அவரை எதிர்த்து தேர்தலில் குதித்திருப்பது அவரது கட்சியிலேயே பொதுச் செயலாளராக இருந்து அரசியல் அனுபவம் மிக்க ஒருவரான மைத்ரிபால சிரிசேன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, எதிர்க்கட்சிகள் பலதும் சேர்ந்து அவருக்கு ஆதரவளித்து மகிந்தவின் சர்வாதிகார ஆட்சியை ஒழிக்க அரும்பாடு பட்டு வருகின்றனர். மேலும், மகிந்தவின் UPFA கட்சியிலிருந்து எதிர்கட்சிக்கு போதுவேட்பாளர் மைத்ரியை ஆதரித்து அண்மைய நாட்களில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவி வருகின்றமை மகிந்தவின் கொடிய ஆட்சியின் விளைவே என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாக இருந்து வருகிறது.
இருப்பினும், எதிர் தரப்பிலிருந்து ஒரு சில உறுப்பினர்களை கோடி கோடியாக பணம்கொடுத்து வாங்கி, அந்த கணக்கையும் சீர்செய்ய முயற்சித்து வருகின்றார் மகிந்தர்.!
ஆரம்பத்திலிருந்தே மோடிக்கும், ராஜபக்சேவுக்கும் இருந்துவரும் நட்பும், இதனால் தமிழ்நாட்டில் பல ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. அதிலும் குறிப்பாக நேற்று இந்தியா வந்திருந்த ராஜபக்சேவை எதிர்த்து கருப்பு கொடி காட்டியோரை படம்பிடித்த தமிழ் நாட்டு ஊடகவியலாளர்களை மோடி அரசாங்கம் கைது செய்தமை இதில் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் இந்திய ஊடுருவலுக்கு பக்க பலமாக இலங்கையின் ராஜபக்சே செயற்பட்டுவரும் அதேவேளை, தொடர்ந்தும் நாட்டு மக்களின் உணர்வுகளை மறந்து மோடி பாராட்டிவரும் நட்பு கவலைக்குரியதே. நேற்றும் ராஜபக்சே கடற்படை 43 இந்திய மீனவர்களை சிறைபிடித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறோ, ஜனவரியில் இலங்கையில் இடம்பெற உள்ள ஜனாதிப்பதித் தேர்தலின் முடிவே இவை அனைத்தும் தொடருமா? இல்லை சுமுகமான நிலை ஏற்படுமா? என்ற தீர்மானத்தை எடுக்க வல்லது.
(தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணத்தில் நாடு பூராகவும் பல லட்சக்கணக்கான போஸ்டர்களையும், கட்அவுட்டுக்களையும் தனக்காக ஜோடித்திருக்கும் ராஜபக்சேவை போன்று அல்லாமல், நாட்டில் இருக்கும் சிறுநீரக நோயால் பாதிப்புற்றோருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள தனக்கு அரசு வழங்கிய பணத்தை செலவிட தீர்மானித்திருக்கின்றார் பொது வேட்பாளர் "மைத்ரிபால"!
உங்கள் வாக்கு? MR or My3?
#Siva

0 comments:
Post a Comment