நெடுநல்வாடையால் அறியலாகும் பண்டைத் தமிழகம்
சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் அக்கால மககளின் வாழ்க்கையினைப் பார்க்க முடிகிறது. அதுபோல் நெடுநல்வாடையிலும், அன்றைய தமிழ் மன்னரும், மக்களும் வாழ்ந்த முறையினைக் காண முடிகின்றது. அதுவும் குளிர்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் இன்றும் நம் கண் முன்னே காணும் இனிய காட்சிகளாகவே காட்சி தருகின்றன. ஒவ்வொரு காட்சியும் ஒப்பிலா தமிழகத்தின் உண்மை பிரதிபலிப்புகள். காலம் காட்டும் கண்ணாடியாய் நின்று அக்காலத் தமிழகத்தை நமக்குக் காட்டிக் கொண்டிருக்கும் இலக்கியமாகிய நெடுநல்வாடை வழி சங்கத் தமிழரைக் காண்போம்.
குளிர்காலத்தில் கோவலரின் நிலை
மழை பெய்தலால் இடையர்கள், ஆநிரைகளை மழை வெள்ளம் வாராத மேட்டுப்பகுதிக்கு இட்டுச் சென்றனர். பழகிய இடத்தை விட்டு புதிய பகுதிக்குச் செல்லும்போது ஏற்படும் அலுப்பும் சலிப்பும் அவர்களுக்கும் இருந்தது போலும். பாடல் வரிகளே காட்சியைக் காட்டுகின்றன.
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்,
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பி,
புலம்பெயர் புலம்பொடு கலங்கி, (3 - 5)
என்கிறது நெடுநல்வாடை.
மாலை வழிபாடு
பெண்கள் மாலைக்காலத்தில் விளக்கேற்றுவதும், நெல்லையும் மலரையும் தூவிக் கைத் தொழுது அதனை வணங்குவதும் வழக்கமாகக் கொண்டிருந்தமையினை,
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது, (42 - 43)
என்ற அடிகள் காட்டுகின்றன.
வாடைக்காலத்து பயன்படுத்தாத பொருட்கள்
கோடைக்காலத்து விசிறி பயன்படுத்தியுள்ளார்கள். அது ஆலவட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங்கேழ் வட்டம் சுருக்கி; கொடுந்தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க; (57 - 59)
கோடைக்காலத்து அரைத்துப் பூசிய சந்தனத்தையும் குளிர்க் காலத்து நாடவில்லை. இதனால் வடநாட்டிலிருந்து வாங்கி வந்த சந்தனக்கல்லும், தென்திசையிலிருந்து பெற்ற சந்தனக் கட்டைகளும் பயன்படுத்தப்படாமல் கிடந்தன.
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்ப, (51 - 52)
குடிப்பதற்கும் குவிந்த வாயையுடைய குடத்திலிருந்த குளிர்ந்த நீரினைப் பருகவில்லை.
கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், (64 - 65)
இவற்றை நோக்க கோடைக்காலத்து விசிறியும், சந்தனமும், தொகுவாய்க் கன்னலில் இருக்கும் குளிர்ந்த தண்ணீரும் பயன்படுத்தும் பழக்கம் இருந்தமையினை அறியமுடிகிறது. அதோடு தமிழரின் காலம் அறிந்து உடல்நலம் போற்றி வாழ்ந்த அருமையும் புலப்படுகிறது.
வாடைக் காலத்து பயன்படுத்தும் பொருட்கள்
வாசனை மர விறகில் நெருப்பூட்டி தூயமூட்டியில் ஏற்படுத்திய வாசனைப் புகையும் நெருப்பும் குளிருக்கு இதமாயின.
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து,
இருங்காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப, (55 - 56)
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர; (66)
என்பதும் இச்செய்திகளைப் பகருகின்றன. மேனியில் பூசுதற்கு குற்றேவல் செய்வோர், கொள்ளின் நிறத்தை ஒத்த கத்தூரி முதலிய வெப்பம் தரும் நறுமணப்பொருள்களை அரைத்தனர்.
காலம் காட்டும் இயற்கைக் கருவி
மாலைக்காலம் வந்துவிட்டது என்பதை அறியவே முடியாதவாறு மழைக்காலம் விளங்கியது. விளக்கு ஏற்றி வழிபட மாலைக் காலத்தைப் பெண்கள் அறிவதற்குத் தாம்பாளத்தில் (தட்டு) மலரும் பருவத்து பிச்சியின் அரும்புகளை இட்டு வைத்திருந்தனர். மாலையும் வந்தது; மலரும் மலர்ந்தது; வந்தது மாலையென மகளிரும் அறிந்தனர் ; வழிபாடும் இயற்றினர்.
இயற்கையினைக் காலக்கருவியாய் பயன்படுத்திய தமிழரின் அறிவினை என்னவென்பது? இதனினும் மேலாய் பொழுதினை அறிவித்த மலரும் பருவத்து மலரினைப் 'போது' என்று பெயரிட்ட புலமையும் வியந்து போற்றுதற்குரியது.
விளக்கு
யவனர்களால் செய்யப்பட்ட பாவை விளக்கினையும் (102) இரும்பால் செய்யப்பட்ட விளக்குகளையும் (42) பயன்படுத்தியுள்ளனர் அன்றைய தமிழர். பாண்டில் விளக்கும் போர்ப்பாசறையில் எரிந்தது (175). பாண்டியரின் போர் பாசறை என்பதால் அங்கே எரியும் விளக்கு பாண்டில் ஆனதோ?
வீடுகள்
மக்கள் வாழ்கின்ற பல மாடிகளைக் கொண்ட வீடுகளும் (29) இருந்தன. மன்னனின் அரண்மனை பல உறுப்புக்களைக் (72 - 92) கொண்டு விளங்கியது.
பயிறு வகைகள்
நெல் (43)
கொள் (50)
அரிய சொற்கள்
அர்ப்பனி - கண்ணீர் (164)
தொகுவாய் கன்னல் - குறுகிய வாயுடைய பாத்திரம் (65)
பிடகை - பூந்தட்டு (39)
விளக்கம் - மோதிரம் (144)
வட்டம் - விசிறி (58)
வம்பு - கச்சு (150)
வடசொற்கள்
தசநான்கு (115)
சாலேகம் (125)
உரோகிணி (163)
'வீழ்' தாலியா?
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடுவீழ் தாழ, (136 - 137)
பிரிவுத் துயரோடு கட்டிலில் இருக்கும் தலைவியைப் பற்றிய வர்ணனை இது. இதற்கு உரை வகுத்த உரையாசிரியர் நச்சினார்க்கினியர், 'பின்னமை நெடு வீழ் - குத்துதல் அமைந்த நெடிய தாலி' என்று உரை வகுத்துள்ளார். முதுகிலே கிடந்த (பின்புறம்) கூந்தல், கட்டிலில் வீற்றிருக்கும் தலைவியின் மார்பிலே, கிடந்தது, முத்துமாலை கிடந்த மார்பிலே கூந்தல் தாழ்ந்து தொங்கியது என்பதே பொருள், சிறுபாணாற்றுப்படையிலும், பிடிக்கை யன்ன பின்னும்வீழ் சிறுபுறத்து (191) என்ற வரியினை நோக்க 'வீழ்' என்பது கூந்தல் வீழ்ந்து கிடந்த பின்புறம் என்ற பொருளையே தருகிறது. வீழ் என்ற சொல் வேறு எந்தப் பாடலிலும் 'தாலி' என்ற பொருளினைத் தரவில்லை என்பதும் நாம் சிந்தித்துத் தெளிதல் அவசியமாகிறது. எனின், நெடுநல்வாடையில் கூறப்பட்ட 'வீழ்' என்ற சொல், தாலி என்ற பொருளைத் தரவில்லை என்ற முடிவினைப் பெற வைப்பதாகக் கொள்ளலாம்.
@முனைவர் இரா.ருக்மணி
