மாங்காய் மடையன்!
ஒருநாள். அந்த ஆட்டு இடையன் ஆடுகளுக்கு இலைத்தழைகளைப் பறித்துப் போட உயரமான மரத்தில் ஏறினான்.
திடீரென்று காற்று பலமாக வீச ஆரம்பித்தது.
மர உச்சியில் நின்றிருந்த அந்த மனிதர் காற்றின் வேகத்தால் தள்ளாடினான்.
உடனே இறங்கவும் முடியாது. அங்கேயே இருந்தால் எந்த நேரத்திலும் மரக்கிளை முறிந்து கீழே விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.
அவனை அறியாமலேயே அவனது கரங்கள் விண்ணை நோக்கி உயர்ந்தன. உதடுகள் முணுமுணுத்தன: "கருணையாளனான இறைவனே! இந்த பேராபத்திலிருந்து என்னை காப்பாற்று. அப்படி என் உயிரைக் காப்பாற்றினால் என் ஆட்டு மந்தை முழுவதையும் விற்று உன் வழியில் செலவு செய்வேன்!" – என்று அவர் பிரார்த்தித்தார்.
காற்றின் வேகம் சற்று தணிந்தது.
உடனே அந்த இடையன், "அப்பாடா..! காற்றின் வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது.." என்றவாறு, "உன் அருளுக்கு நன்றி இறைவனே..! நான் நிச்சயம் என் ஆட்டு மந்தையின் ரோமங்களை கத்தரித்து அவற்றை விற்று உன் வழியில் செலவு செய்வேன்!" – என்று கூறிக் கொண்டே உச்சிக் கிளையிலிருந்து இறங்க ஆரம்பித்தான்.
காற்றின் வேகம் நன்றாக தணிந்திருந்தது.
இடையன் மரத்திலிருந்து இறங்கியவாறு, "எல்லா ஆடுகளின் ரோமம் எதற்கு? நாலைந்து ஆடுகளின் பாலைக் கறந்து அதை விற்று வரும் தொகையில் ஏழை, எளியோர்க்கு தான – தர்மங்களைச் செய்துவிட்டால் போயிற்று!" – என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
இடையன் மரத்திலிருந்து இறங்கும்போதே, காற்றின் வேகம் முற்றிலும் தணிந்து விட்டது. சூழல் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது.
மரத்திலிருந்து இறங்கி தரையை அடைந்த இடையன், "அப்பாடா..!" ஒரு வழியாய் சாமார்த்தியமாய் இறங்கிவிட்டேன். என் திறமையைக் கொண்டு உயிர் பிழைத்துக் கொண்டேன். நடுவில் இறைவனின் உதவி என்ன வேண்டி கிடக்கிறது? என் சொந்தப் பொருளை இழப்பதற்கு நான் என்ன மாங்கா மடையனா?" – என்றவாறு பறித்துப் போட்ட இலைத் தழைகளை எடுத்துக் கொண்டு ஆட்டு மந்தை இருந்த இடம் நோக்கி நடந்தான்.
#ஆன்மிகச்_சிந்தனை

0 comments:
Post a Comment