இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம். இந்த அம்மாக்கள் தோசைக்கல்லில் நிலவு... Posted: 07 Mar 2015 07:09 AM PST இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம். இந்த அம்மாக்கள் தோசைக்கல்லில் நிலவு வார்ப்பவர்கள் ! =================== அப்பா கட்டிய வீடாயிருந்தாலும் அது எமக்கு அம்மா வீடுதான் ! =================== அடுப்படியே அம்மாவின் அலுவலகம் ! அன்பு மட்டுமே எதிர்பார்க்கும் சம்பளம் ! =================== பிள்ளைகள் வெளியூரில் பணியிலிருக்கும் ஒரு வீட்டில், பக்கத்துவீட்டுக் குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ! =================== அப்பா வாசம் வெயில் வாசம் ! அம்மா வாசம் நிலா வாசம் ! எமது சமையலறையெங்கும் நிலா வாசம் ! =================== எமக்குக் காய்ச்சல் வந்தால் மருந்து தேவையில்லை ! அடிக்கடி வந்து தொட்டுப்பார்க்கும் அம்மாவின் கையே போதுமானது ! =================== இவ்வளவு வயதாகியும் புதுச்சட்டைக்கு மஞ்சள்வைத்து வருபவனைக் கேலி செய்யும் நண்பர்களே .......... அது, அவன் வைத்த மஞ்சள் அல்ல ! அவன், அம்மா வைத்த மஞ்சள் ! =================== பிள்ளைகள் ஊரிலிருந்து கொண்டு வரும் பயணப்பையில் இந்த அம்மாக்கள் எதிர்பார்ப்பது இன்னுங்கொஞ்சம் அழுக்குத்துணிகளை ! =================== மகனுக்கான அப்பாவின் கோபத்திற்கெல்லாம் அம்மாவின் முதுகுதான் கிழக்கு ! =================== டைப்பாய்டு வந்து படுத்த அம்மாவுக்கு சமைக்க முடியவில்லையே என்கிற கவலை ! =================== இங்கே பலரது அகராதியில் வீடு என்கிற சொல்லுக்கு நேரே அம்மா என்று உள்ளது ! =================== புகைவண்டியில் பிதுங்கி வழியும் பெருங்கூட்டத்தில் ஊர் போய்ச்சேர ஒற்றைக்காலில் நின்றுகொண்டு எட்டு மணிநேரம் ஒருவன் பயணிக்க முடிவதன் மூன்றெழுத்துக் காரணம், அம்மா ! =================== அம்மா தாயே என்று முதன் முதலில் பிச்சை கேட்டவன் உளவியல் மேதைகளுக்கெல்லாம் ஆசான் ! =================== எந்தப் பொய் சொல்லியும் அம்மாக்களை ஏமாற்றிவிடமுடியும் சாப்பிட்டு விட்டேன் என்கிற அந்த ஒரு பொய்யைத்தவிர ! =================== அத்தி பூத்தாற்போல அப்பனும் மகனும் பேசிச்சிரித்தால் விழாத தூசிக்கு கண்கள் தேய்த்துக்கொண்டே அப்பால் நகர்கிறார்கள் அம்மாக்கள் ! =================== வெளியூர் செல்லும் பிள்ளைகளின் பயணப்பைக்குள் பிரியங்களைத் திணித்து வைப்பவர்கள் இந்த அம்மாக்கள் ! =================== பீஸ் கட்ட பணமென்றால் பிள்ளைகள் அம்மாவைத்தான் நாடுகின்றன ........ காரணம், எப்படியும் வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! அல்லது எடுத்துக் கொடுத்துவிட்டு திட்டு வாங்கிக்கொள்வாள் ! =================== வீட்டுக்குள் அப்பாவும் இருந்தாலும் அம்மா என்றுதான் கதவு தட்டுகிறோம் ! =================== அம்மாக்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் குறைந்தபட்சம் இரண்டு சொட்டுக்கண்ணீர் ஈரம் உலராமல் ! =================== அகில உலக அம்மாக்களின் தேசிய முழக்கம் இதுதான் .......... " எம்புள்ள பசி தாங்காது! " #பிடித்திருந்தால்_பகிர்ந்து_கொள்ளுங்கள்...! Via MuthuKumaran  |
0 comments:
Post a Comment